கும்பகோணத்தில் லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் திங்கள்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த நீலத்தநல்லூரைச் சேர்ந்த சாரங்கன் மகன் குமார் (38). இவர் பாபநாசத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு குமார், பாபநாசத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவரது வாகனம் அசூர் புறவழிச்சாலை அருகே வந்த போது, எதிரே வந்த லாரி குமாரின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சுவாமிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.