தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் காணாமல்போன கலை பொக்கிஷங்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வழக்குரைஞர்கள் மனு அளித்தனர்.
மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமாரிடம் வழக்குரைஞர்கள் வெ. ஜீவகுமார், நெடுஞ்செழியன், உமர் முக்தார், சக்கரவர்த்தி, பிரபு ஆகியோர் அளித்த மனு:
இந்தியாவில் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தில் 10 மொழிகளில் ஏறத்தாழ 69,000 நூல்கள், 39,000 ஓலைச்சுவடிகள் உள்ளன. மேலும், சோழர் கால ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. கி.பி. 1810 ஆம் ஆண்டில் புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு என்ற நூல் அச்சிடப்பட்டுள்ளது.
இந்நூலகத்தில் உள்ள கண்ணாடிப் பேழையில் இருந்த இந்த நூல் 2006, அக். 8-ம் தேதி களவு போய் உள்ளது. இதுகுறித்து ஜெர்மனியை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் மீது புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நூலகத்தில் துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல, 1968 ஆம் ஆண்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நவரத்தினங்கள் பொறிக்கப்பட்ட கிருஷ்ணர் படம் காணாமல் போனது.
தஞ்சாவூர் பெரியகோயில் சிலைகள் மாயமான நிலையில் அதற்கான புலனாய்வு தீவிரமாக இருந்து வருகிறது.
இதுபோல சரசுவதி மகால் கலை பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். களவு போனவை மீட்கப்பட வேண்டும்.
இதுகுறித்து உரிய புலனாய்வு நடத்தி காணாமல் போன ஓலைச் சுவடிகளையும், இதர கலை பொக்கிஷங்களையும் மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.