வேளாண் துறையில் அரசின் மானிய திட்டங்கள், அவற்றின் பயன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் மதியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகள் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள்,
மானிய விலையில் பெறக் கூடிய இயந்திரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இயந்திர வகைகள் மற்றும் இடுபொருள்கள் தேவைகள் குறித்து தாங்களாகவே முன்பதிவு செய்து கொள்ள முடியும். பயிர் காப்பீடு இழப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் நிலை குறித்து அறியலாம்.
அரசு விற்பனை மையங்கள், அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களில் உரங்கள், விதை வகைகள், இருப்பு விவரங்களை எளிதில் தெரிந்து கொண்டு வாங்கி பயன்பெற முடியும்.
வேளாண் இயந்திரங்களை வாடகை மையங்களில் பெறும் வசதி, உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களை சந்தைப்படுத்துவது குறித்த விவரங்கள், விலை நிலவரம், கனமழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் விவசாய பணிகளை தொடங்குவது மற்றும் வேளாண் துறை சார்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கள் கிராமங்களுக்கு பதினான்கு நாள்களுக்கு ஒருமுறை நிரந்தர பயணத்திட்டம் மேற்கொள்ளும் வசதி குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இதன்படி, உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கள் கிராமங்களுக்கு வர உள்ள இடம், நாள், தேதி ஆகிய விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, சந்தேகங்களை போக்கிக் கொள்ள முடியும்.
எனவே, பேராவூரணி வட்டத்தில் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் உங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள் தீபா (பேராவூரணி தொகுதி 9698419932 என்ற எண்ணிலும், கோகிலா (சித்தாதிக்காடு தொகுதி 9965833488 என்ற எண்ணிலும் சாந்தா ஷீலா (ஒட்டங்காடு தொகுதி)-8883376048 என்ற எண்ணிலும் கார்த்திகேயன் (குறிச்சி தொகுதி) 8012589633 என்ற எண்ணிலும் ரவிச்சந்திரன் (திருச்சிற்றம்பலம் தொகுதி) - 9751019073 என்ற எண்ணிலும் சசிக்குமார் (ஆவணம் தொகுதி) - 8098343040 ஆகிய கைப்பேசி எண்களிலும் அல்லது பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அட்மா திட்ட கள அலுவலர்கள் சுரேஷ், தமிழழகன், சத்யா ஆகியோரையும் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் பீமா, கார்த்திகா, கயல்விழி ஆகியோரையும் தொடர்பு கொண்டு பயனள்ள இந்த உழவன் செயலியினை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.