திமுகவினர் சாலை மறியல்: 552 பேர் கைது

ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 552 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலின் கைதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 552 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகம் முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன் திமுக மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தலைமைக் குழு உறுப்பினர் து. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, புதிய பேருந்து நிலையம் முன் திமுக மேற்கு ஒன்றியச் செயலர் முரளிதரன் தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவையாறு கடைவீதியில் திமுக நகரச் செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திருவையாறு வடக்கு ஒன்றியச் செயலர் சிவசங்கரன், தெற்கு ஒன்றியச் செயலர் கெளதமன், பொதுக்குழு உறுப்பினர் அரசாபகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், செங்கிப்பட்டியில் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலர் முருகானந்தம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.
இதுபோல மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 12 பெண்கள் உள்பட 552 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தில் 80 பேர் கைது
கும்பகோணம் திமுக நகர அலுவலகத்திலிருந்து திமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு பழைய மீன்மார்கெட் அருகே வந்து, அங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்தார். இதில் திமுக நகர செயலாளர் சுப. தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் தி. கணேசன், ஆர். அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டையில் 55 பேர் கைது
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, மதுக்கூர் ஒன்றியச் செயலர் ஆர்.இளங்கோ உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com