தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (நவ.9) மான் வாகனத்திலும், சனிக்கிழமை பூத வாகனத்திலும், 11-ம் தேதி யானை வாகனத்திலும், 12-ம் தேதி ரிஷப வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. நவ. 13-ம் தேதி மாலை ஆடுமயில் வாகனத்தில் புறப்பாடும், பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர், நவ. 14-ம் தேதி காலை திருக்கல்யாணமும், மாலை முத்துப்பல்லக்கும், 15-ம் தேதி குதிரை வாகனப் புறப்பாடும், 16-ம் தேதி திருத்தேரோட்டமும், 18-ம் தேதி காலை விடையாற்றி, மாலை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும், கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலை யாக பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நவ. 12-ம் தேதி வரை காலை, மாலையில் சுவாமி புறப்பாடும், 13-ம் தேதி குதிரை வாகனத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி புறப்பாடும், சூரவாகனம் புறப்பாடும் நடைபெறும். பிற்பகலில் ஸ்ரீகிரிகுஜாம்பிகை சன்னதிக்கு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் மண்டகபடிக்கு புறப்பாடும், மாலை 6 மணியளவில் மயில் வாகனத்தில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியும், சூரவாகனமும், நவவீரபாகு வேடதாரிகளுடன் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு புறப்பாடும், இதைத்தொடர்ந்து திருநாகேஸ்வரம் தெற்கு வீதியில் சூரசம்ஹார விழாவும் நடைபெறும். 14-ம் மாலை 6 மணியளவில் கத்திகழுவுதல் மண்டகப்படியும், 15- ம் தேதி மாலை 6 மணியளவில் திருக்கல்யாணமும் தொடர்ந்து வீதியுலாவும் நடைபெறும்.