தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியைக் கண்காணிக்கத் தவறியதாகத் தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்துக்கு வியாழக்கிழமை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ரூ. 5,000 அபராதம் விதித்தார்.
தஞ்சாவூர் காந்திஜி சாலை பகுதியில் உள்ள குடும்ப நலம் துணை இயக்குநர் அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகம், சத்திரம் நிர்வாக அலுவலகம், ஹோட்டல் தமிழ்நாடு, புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி கட்டடம் ஆகிய இடங்களில் ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது, புதிதாகக் கட்டப்படும் மாநகராட்சிக் கட்டடத்தின் மேல் தளத்தில் கான்கிரீட் மீது விடப்பட்ட தண்ணீரில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதை ஆட்சியர் கண்டறிந்தார். கான்கிரீட் மீது விடப்பட்ட தண்ணீரை மாற்றாத காரணத்துக்காகவும், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதைக் கண்காணித்து தடுக்க தவறியதற்காகவும் தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தார். மேலும், சத்திரம் நிர்வாக வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட காரணத்துக்காக சத்திரம் நிர்வாகத்துக்கு ஆட்சியர் ரூ. 500 அபராதம் விதித்தார்.