பட்டுக்கோட்டையை அடுத்த கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கே.மதியழகன் (49). இவர் வெளியூர் செல்வதற்காக அருகிலுள்ள கொண்டிக்குளம் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த பட்டுக்கோட்டை, கோட்டை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ். முத்துமணிகண்டன் (22), லெட்சத்தோப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த என். விஜய் (22) ஆகிய இருவரும் பணம் கேட்டு கத்தியைக் காட்டி மதியழகனை மிரட்டினராம். அவர் பணம் தர மறுக்கவே இருவரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மதியழகன் சட்டை பையில் வைத்திருந்த 200 ரூபாயை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து மதியழகன் அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து முத்துமணிகண்டன், விஜய் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.