அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்தார். கல்லூரி தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஜியாவுதீன் வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு உதவி அலுவலர் ஜி.பரமேஸ்வரி, அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் ஏ.கலைச்செல்வன், சி.அண்ணாதுரை ஆகியோர் போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஒளிப்படக்காட்சி மூலம் விளக்கினர்.
ஏற்பாடுகளை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல்காதர் செய்திருந்தார்.