சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகோயில் உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழுத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள சரித்திர புகழ்பெற்ற மற்றும் சாதாரண கிராமக் கோயில்களில் சிலைகள் கடத்தப்பட்டதும், அதனை சிலைக் கடத்தல் தடுப்புக் குழு கண்டுபிடித்து, சிலைகளை மீட்டு தொடர்புடையவர்களைக் கைது செய்து வருகிறது.
இதில், பெரும்பாலும் அறநிலையத் துறை அலுவலர்கள் மீது தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிலை கடத்துவதை அவர்கள் மட்டுமே செய்திருக்க முடியாது. வேறு பலருக்கும் தொடர்பு இருக்கலாம். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அறநிலையத் துறை அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பது வேடிக்கையாக உள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்து கடத்தப்பட்ட ராசராசசோழன், லோகமாதேவி சிலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெரியகோயிலில் மேலும் சிலைகள் மாற்றப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்கின்றனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது, உண்மையாக இருக்குமேயானால், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.