அனைத்து ஐயப்ப சங்கங்கள், ஆன்மிக அன்பர்கள் சார்பில் சபரிமலையில் பழைய முறைப்படியே பெண்களை அனுமதிக்கக் கோரி கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்தார். சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரைக் குழுத் தலைவர் நா. கோபாலகிருஷ்ணன் சுவாமிகள், குருசாமி பலராமன் ஆகியோர் ஐயப்பன் திருவுருவப் படத்துக்கு பூஜை செய்து, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் உத்திரபூஜை வழிபாட்டுக் குழுத் தலைவர் எம்.கே.கே. மோகன், ஐயப்ப தர்ம சேவா சங்க மாநிலத் தலைவர் வி. கிருஷ்ணசாமி, மாநில செயலர் பி. மதியழகன், குருசாமி ரவி, கடிச்சம்பாடி வரதராஜசுவாமிகள், ஹரிஹர புத்திர சேவா அறக்கட்டளை மாநிலச் செயலர் எஸ். பரணிதரன், அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்ட இணை செயலர் பிரபாகரன், பிரிமியர் குழுமத் தலைவர் கே. செளந்தரராஜன், அன்னை கருணை இல்ல நிறுவனர் ஜி.டி. அம்பலவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை காக்கும் வகையில் பழைய முறைப்படியே பெண்களை அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதில் குருசாமிகள், அனைத்து ஐய்யப்ப சங்கங்கள், ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.