தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி - கந்தர்வக்கோட்டை சாலையில் பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனையகம் உள்ளது. இங்கு சனிக்கிழமை நள்ளிரவு விற்பனையான தொகையை பணியாளர்கள் நிலைய அறையினுள் இருந்த பீரோவில் வைத்து விட்டு, தூங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், பெட்ரோல் நிலைய அறைக்குள் சென்று, அதிலிருந்த ரூ. 1.30 லட்சம் பணம், மடிக்கணினி, ஒரு செல்பேசி உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து பணியாளர்கள் அறையினுள் சென்று பார்த்தபோது பொருள்கள் திருடப்பட்டிருந்ததை அறிந்தனர். இதுகுறித்து பெட்ரோல் நிலைய உரிமையாளருக்கும், செங்கிப்பட்டி போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.
பெட்ரோல் விற்பனையகத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து, பணத்தை திருடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.