தஞ்சாவூரில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, தத்து நிறுவனத்திடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது .
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக. 15-ம் தேதி கண்டெடுக்கப்பட்ட பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா குழந்தைகள் இல்ல தத்து நிறுவனத்திடம் மாவட்ட வருவாய் அலுவலர் ஒப்படைத்தார்.
இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், கல்விக் கடன் உள்ளிட்ட 306 கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என். நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.