ஏழு தமிழர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய வலியுறுத்தல்

ஏழு தமிழர்களையும் தமிழக ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏழு தமிழர்களையும் தமிழக ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பது பாராட்டுக்குரிய செயல்.
தமிழ்நாடு ஆளுநர்,  சட்ட வல்லுநர் கருத்துகளைக் கேட்பது ஒருபக்கம் இருந்தாலும், காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை 14 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த நிலையில், அன்றைய மகாராஷ்டிர காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது என்ற முன்னெடுத்துக்காட்டை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-ன்படி, சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்குத் தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்பதைத் தொடர்ச்சியாகப் பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.
தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின் மீது மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டிய நிலை இல்லை. ஆளுநர் மத்திய அரசின் கருத்துக்கேட்பு நடைமுறையில் இறங்கக் கூடாது. கோபால் கோட்சே விடுதலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும்,  ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் கணக்கில் எடுத்தும், ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் ஆளுநர் காலதாமதமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com