தஞ்சாவூரில் காதலி ஆற்றில் விழுந்து இறந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த காதலன் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
தஞ்சாவூர் மானோஜிபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் ஜெயஸ்ரீ (21). இவர் மாநகரில் உள்ள கல்லூரியில் முதுநிலை வணிகவியல் முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்து வந்த வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த சேகர் மகன் விக்னேசும் (20) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் தஞ்சாவூர் அருகே நத்தமாடிப்பட்டி பாலம் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய்க்கு ஆக. 31-ம் தேதி சென்றனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, கால்வாயில் குதித்த ஜெயஸ்ரீயை காப்பாற்றுவதற்காக விக்னேசும் குதித்தார். இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதைப் பார்த்த மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் விக்னேசை காப்பாற்றினர். ஆனால், ஜெயஸ்ரீ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், அவரை மீட்க இயலவில்லை. சில நாட்களுக்குப் பிறகு கல்யாண ஓடை வாய்க்காலில் சூரக்கோட்டை பகுதியில் ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார்.
இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த விக்னேஷ் அண்மையில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு விக்னேஷ் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரித்தனர்.