கடந்த ஆண்டில் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிகழாண்டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிகழாண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். புதிதாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. சிலைகள் அதிகபட்சமாக 10 அடி உயரத்துக்குள் இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்பட்ட சிலைகளை வைக்க அனுமதி கிடையாது. நீர் நிலைகளில் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். நீர் நிலையில் விடுவதற்கு முன்பாக சிலையில் அலங்காரம் செய்யப்படும் பொருட்களை அகற்ற வேண்டும். சிலை வைக்கும் இடங்களில் தீ பற்றாத வகையில் தகரக் கொட்டகை மட்டுமே அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு சிலைக்கும் தலா இரு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். என்றாலும், சிலை பாதுகாப்புக் குழுவினர் முழு நேரமும் இருக்க வேண்டும். பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். காலை, மாலை பூஜை நேரத்தில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தில் பிற மதங்களைப் புண்படுத்தும் விதமாகவும், குறை சொல்லும் விதமாகவும் பேசக்கூடாது.
சிலை வைத்த உடன் தொடர்புடைய காவல் நிலைய ஆய்வாளருக்குச் சிலை அமைப்பாளர்கள் தகவல் அளிக்க வேண்டும். ஊர்வல நேரத்தைச் சரியானபடி கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் ஊர்வலம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஊர்வலத்தில் வெடி வெடிக்க அனுமதி கிடையாது.
சிறு பிரச்னை ஏற்பட்டாலும் தொடர்புடைய காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் தகவல் அளிக்க வேண்டும் என்றார் கண்காணிப்பாளர்.
காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் ரவிசேகர், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.