கும்பகோணத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், ஒருவரை கைது செய்தனர்.
கும்பகோணம் பாலக்கரை பகுதியில் கஞ்சா, மற்றும் வெளிமாநில மதுபானங்கள் பெருமளவில் விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், மதுவிலக்கு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸார், பாலக்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் பாலக்கரை முனீஸ்வரன் கோயில் அருகில் நின்றிருந்த கல்யாணராமன் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கார்த்தி (31) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் கஞ்சா, வெளிமாநில மதுபானங்களை விற்பவர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள், புதுச்சேரி மாநிலத்தின் 180 மிலி அளவு கொண்ட 1500 மதுபான பாட்டில்கள், 200 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, கார்த்தியை கைது செய்தனர்.