பாரதியஜனதா கட்சியில் பூத் வரை மகளிர் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என அக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் பாஜக சார்பில் பூத் வரை மகளிர் என்ற திட்டம் தொடர்பாக மாநில மகளிரணி சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்குப் பாடுபடுவது, பூத் வரை மகளிர் என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாஜக மாநில மகளிரணி தலைவர் ஏ.ஆர். மகாலஷ்மி தலைமை வகித்தார். பாஜக மாநிலச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ, பொதுச் செயலர் யு.என். உமாபதி உள்ளிட்டோர் பேசினர். மகளிரணி மாநிலப் பொறுப்பாளர்கள் பிரபாரி, உமா ரவி, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் குயிலி, கோட்டப் பொறுப்பாளர் முத்துலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.