பாபநாசம் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கி பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 4 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
அய்யம்பேட்டை அருகேயுள்ள மேலவழுத்தூர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்ற அரசுப் பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு கும்பகோணத்திலிருந்து திருச்சி நோக்கி ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 4 பேர் பண்டாரவாடை பேருந்து நிறுத்தத்தில் இறங்க டிக்கெட் கேட்டனர்.
பண்டாரவாடை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என நடத்துநர் கூறவே, ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தகாத வார்தைகளால் திட்டினராம்.
இந்நிலையில், பேருந்து அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தை நிறுத்த சொல்லி இறங்கிய 4 பேரும் கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனராம்.
புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய கோவில்தேவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரகுநாதன் (32), சிவகுமார்(31), ரமேஷ்குமார்(30), இலுப்பக்கோரை கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (43) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், கடந்த 9ஆம் தேதி அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதும் இவர்கள்தான் என தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.