கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சுமார் 900 சதுர அடியில் மேற்கூரையுடன் 500 அடி ஆழத்தில் புதிய ஆழ்குழாய் அமைத்து, அதில் 3 குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட நிலையில், தலா 1000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தொட்டிகள் அமைக்கப்பட்டு, நவீன இயந்திரங்களின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 4 குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்தை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பங்கேற்று, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்து பார்த்தார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழழகன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார், அம்பிகாபதி, நகரமைப்பு அலுவலர் பாஸ்ரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.