தஞ்சாவூர் மாவட்டத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் சில இடங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
கல்லணை 46.8, பூதலூர் 44.8, திருக்காட்டுப்பள்ளி 13.6, மஞ்சளாறு 12.2, தஞ்சாவூர் 6.3, அய்யம்பேட்டை 6, கும்பகோணம் 5, திருவிடைமருதூர், ஈச்சன்விடுதி தலா 2.
இதில், பூதலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, பூதலூர் அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கோகிலா (26), பள்ளி மாணவி மதுமிதா (16) விநாயகர் சதுர்த்தியையொட்டி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு வியாழக்கிழமை மாலை சென்றனர். அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சென்றபோது மின்னல் தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து, இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள 6 வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழுதடைந்தன. இதேபோல, தஞ்சாவூர் உள்பட சில இடங்களில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.