தஞ்சாவூர் கலைகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன்.
இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளிகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கலைகளின் ஆவண வரலாறு என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் பேசியது:
பொன்னி நதி பாயும் நன்செய் கழனிகள் மிகுந்துள்ள தஞ்சாவூர் மாவட்டமானது கலைகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் போற்றிப் பாதுகாத்த பெரியகோயில், ஓவியங்கள், சிற்பங்கள், அரண்மனைகள், நூலகம், ஓலைச்சுவடிகள், ஆவணக் காப்பகம் எனக் கலைகள் தழைத்தோங்கும் பகுதியாகத் தஞ்சாவூர் திகழ்கிறது. சோழர் காலத்துச் சிற்பங்கள், சமண, பெளத்த வரலாற்று எச்சங்களாகவும், மராட்டியர்களின் மோடி ஆவணக் களஞ்சியங்களாகவும், கலை, பண்பாட்டுக் கருவூலங்களாகவும் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளும் தஞ்சாவூர் நகரமும் திகழ்கிறது என்றார் சுப்பிரமணியன்.
மேலும், கலைகளின் ஆவணங்கள்' என்ற தலைப்பில் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணி. மாறன், தொல்லியல் ஆவணங்கள் தொல்லியல் சான்றுகளாக என்ற தலைப்பில் கடல்சார் மற்றும் கடல்சார் தொல்லியல் துறை இணைப் பேராசிரியர் வீ. செல்வக்குமார் பேசினர்.
மொழிப் புலத் தலைவர் இரா. முரளிதரன், துறைத் தலைவர் ச. கவிதா, கோவை அரசு கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.