பேருந்தில் மயக்க குளிர்பானம் கொடுத்து வயதான தம்பதியிடமிருந்து 14.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சாந்தலிங்கம் (82). இவரது மனைவி தனலட்சுமி (73).
இதில் தனலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், தம்பதியினர் திருச்சி திருவானைக்கா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி வந்து செல்வார்களாம். இதேபோல, கடந்த 17-ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்த இவர்கள், சிகிச்சை முடிந்து அரசு பேருந்து ஒன்றில் அரியலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்த மர்ம நபர் ஒருவர், தம்பதியிடம் பேசியுள்ளார். இதில் இருதரப்பும் உணவுப் பண்டங்களை பரிமாறிக் கொள்ள, மர்ம நபர் மாம்பழ குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார்.
இதைக் குடித்ததும் மயங்கிய தம்பதிக்கு, அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து பேருந்து அரியலூருக்குச் சென்றபோது, மயக்க நிலையில் கிடந்த தம்பதியை நடத்துநர் தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழுந்திருக்காததால், அரியலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பேருந்தில் வந்த மர்ம நபர், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துவிட்டு தம்பதியினர் அணிந்திருந்த 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தலிங்கம் அளித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.