தில்லி போராட்டத்துக்கு ஆதரவு: முக்கொம்பு அணையில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி முக்கொம்பு அணையில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் சனிக்கிழமை

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி முக்கொம்பு அணையில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில், கடந்த ஒன்றரை மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில விவசாயிகள், தொண்டு நிறுவனத்தினர், இளைஞர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், திருச்சி முக்கொம்பு அணையில் காவிரி ஆற்றுக்குள் இறங்கி கையில் கருப்புக் கொடியுடன் சனிக்கிழமை காலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் அயிலை. சிவசூரியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத்மணி, முன்னாள் ஊராட்சித் தலைவர் கல்யாணசுந்தரம், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர், இளைஞர்கள் என பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒற்றைத் தீர்ப்பாய மசோதாவை திரும்பப் பெறவேண்டும, நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், காவிரி கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் கைது: இதேபோல, திருச்சியில் கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாக்குறிச்சியைச் சேர்ந்த தமிழக மக்கள் சேவை இயக்க விவசாயிகள் பிரிவுத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேரை திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com