திருச்சி போலீஸார் கொள்ளையன் ஒருவனை குண்டர் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி திருச்சி - திண்டுக்கல் சாலை பொன்னகரில் உள்ள ஏடிஎம்-மிலிருந்து திரும்பிய ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழபஞ்சம்பட்டியைச் சேர்ந்த அழகுராஜபெருமாள் மகன் சுரேஷ் (37) என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மீது தமிழகம் முழுவதும் உள்ள 26 மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் போலி மதுபானங்கள் உற்பத்தி, கலப்பட மதுபானம் தயார் செய்வது, ஸ்பிரிட் கடத்துவது, புதுச்சேரி மதுபானங்கள் வைத்திருந்தது போன்ற பல வழக்குகளும், திருச்சி கே.கே.நகர், தில்லைநகர், திருச்சி மாவட்டம் முசிறி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருப்பூர், திருவேற்காடு, காஞ்சிபுரம் வெள்ளவேடு, சத்துவாச்சேரி, மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களில் வழிபறி, 15 கார்களைத் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஸ்பிரிட் வழக்கிலும் இவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதன் பேரில் போலீஸார் சுரேஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் தொடர்ந்து பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண், சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.