திருச்சி உறையூர் பெஸ்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் மகன் ஜம்புகேஸ்வரன் (43). இவர்மீது உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்காக திருச்சி 3-ஆவது குற்றவியல் நடுவரால் கடந்த 2016 அக்டோபர் 14-ஆம் தேதி நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஜம்புகேஸ்வரன் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், இவரைப் பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ. அருண் உத்தரவுப்படி, ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கடந்த 18-ஆம் தேதி பிற்பகல் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் பதுங்கியிருந்த ஜம்புகேஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். அவரை, திருச்சி 3-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.