திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் காவல்துறை ரோந்து வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 5 பேர் புதன்கிழமை காயமடைந்தனர்.
விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் (53). இதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் பாண்டியன்
(29). இவர்கள் இருவரும் புதன்கிழமை மதியம் ரோந்து வாகனத்தில் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலை அருகே வந்த போது வாகனத்தை திருப்ப தலைமைக் காவலர் பாண்டியன் முயற்சித்த போது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சாலையில் சென்ற கார்
கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது. இதில் தமிழ்ச்செல்வன், பாண்டியன், கார் ஓட்டுநர் திருவெறும்பூர் வீரப்பம்பட்டி வினோத் , காரில் பயணம் செய்த 2 மருத்துவர்கள் உள்பட 5 பேர் பலத்த
காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து கண்டோன்மென்ட் தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.