என்ஐடி, ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க பொது நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பணியில் திருச்சி என்ஐடி பிரக்யான் திசை குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி பிரக்யான்- திசை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பு: பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு எதிர்கொள்ளும் தேர்வில் பொது நுழைவுத் தேர்வும் ஒன்று. ஜேஇஇ எனப்படும் இத்தேர்வு இரு நிலைகளைக் கொண்டது.
பொது நுழைவுத் தேர்வு (மெயின்) நாட்டிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் பிற தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குத் தகுதி பெறச் செய்யும். அதே சமயம் ஜேஇஇ அட்வான்ஸ் நிலை இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐஐஎஸ்இஆர் போன்ற கல்லூரிகளில் சேர உதவும். பொது நுழைவுத் தேர்வு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களிலிருந்து மாணவனுக்கு இருக்கும் அறிவுத்திறனை சோதிக்கும். இத்தேர்வுக்கு வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விரிவான பாடத்திட்டத்தை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.
பி.இ, பி.டெக். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 2018, அக்டோபர் 8 காலையிலும், பி.ஆர்க், பி. பிளானிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிற்பகலில் நடைபெறும்,. என்ஐடி, ஐஐடிகளில் சேர வேண்டும் என்பது மாணவனின் கனவாகும். எனினும், சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுஇல்லாத காரணத்தால் பலருக்கும் அக்கனவு கைகூடுவதில்லை. மாணவர்களின் கனவை நிஜமாக்கும் வகையில் இதுகுறித்த விழிப்புணர்வுப் பணியில் பிரக்யான் திசை அமைப்பு ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.