முனைவர் பட்ட ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் போன்ற 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் மானியத் தொகையை 80%-லிருந்து 50% ஆக குறைத்துள்ளது. மானியத்துக்கான காலமும் குறைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி ஏற்கெனவே இருந்த நிலையே தொடர வேண்டும்
முனைவர் பட்ட ஊக்க ஊதிய உயர்வை ஏற்கெனவே இருந்தவாறு வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் தொடக்க ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், கிரேடு-2 முதல்வர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும்ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றம் பற்றிய பரிந்துரை ஊதியக் குழுவில் இல்லை. இக்குறைபாட்டை சரி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகிய இரு கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தி. அறிவுடைநம்பி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் திருச்சி மண்டலச் செயலர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன், மண்டலத் தலைவர் சார்லஸ் செல்வராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொருளாளர் செந்தில் உள்ளிட்டோர் கோரிக்கைககளை வலியுறுத்தி பேசினர். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.