திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் நிலை தடுமாறி விழுந்ததில் காயமடைந்த அவர் சிகிச்சைபலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
லால்குடி அருகேயுள்ள தாளக்குடிஊராட்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் திவேஷ் (17). திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் நெ. 1 டோல்கேட் சென்றுள்ளார். அப்போது, எலும்புவாடி வாய்க்கால் அருகே சென்ற போது மேலவாளாடி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35) என்பவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, திவேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பாலமுருகன் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் பாலமுருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
திவேஷ் திருச்சி தென்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி திவேஷ் உயிரிழந்தார். கொள்ளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.