வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.4.80 லட்சம் மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த ஒருவரை திருச்சி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த லோகநாதன் மகன் இளம்பரிதி. இவரை கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி மதுரை பி.பி. குளம் சிங்கராயர் காலனியை சேர்ந்த அக்பர்அலி என்பவர் 5 நபர்களுடன் சேர்ந்து ஆசைவார்த்தை கூறி ரூ. 4,80,000 பெற்றுக் கொண்டு சுற்றுலா விசாவில் கம்போடியாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, இளம்பரிதிக்கு போலி விமான டிக்கெட் தயார் செய்து கொடுத்துவிட்டு மற்றவர்கள் தமிழகத்துக்கு வந்துவிட்டனர்.
இதையடுத்து, அங்கு தவித்த இளம்பரிதி இந்தியதூதரகத்தை அணுகி, அங்கிருந்து தனக்கு தெரிந்த நபர் மூலம் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தார்.
பின்பு, அக்பர் அலி மற்றும் 5 பேரிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பரிதி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருணிடம் அளித்த புகாரின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனர்.