முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் மாரடைப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம். செல்வராஜ் (52). தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியில் உள்ள இவர் முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் வாழவந்தி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவரது அலுவலகத்துக்கு வேலைநிமித்தமாக வந்தாராம். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கட்சியினர் முசிறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.