தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணி நியமனத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இச் சங்கத்தின் தலைவர் எம். செல்வம், பொதுச் செயலர் வி.சேதுராமலிங்கம் ஆகியோர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது: தமிழகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் மாநில அரசின் முடிவு வரவேற்புக்குரியது. எனினும், சில திருத்தங்களையும், புதிய விதிகளையும் இச்சட்டத்தில் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ளவேண்டும். அதன்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் கல்விச்சான்றுகள், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அல்லது அதற்கு இணையான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
துணைவேந்தர் நியமனம் குறித்த நடவடிக்கை தொடங்கியது முதல்பணி நியமனம் வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக நடத்துவதோடு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இப்பணியை முடிக்க வேண்டும்.
இத்தகைய திருத்தங்களை புதிய சட்டத்தில் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.