திருச்சியிலிருந்து விமானத்தில் அரபு நாடுகளுக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ. 36.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து திங்கள்கிழமை காலை 5.25 மணிக்கு சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண். ஐ.எக்ஸ்.613) புறப்படத் தயாராக இருந்தது. முன்னதாக சுங்கத்துறையினர் பயணிகளிடம் நடத்திய சோதனையின் போது சென்னையைச் சேர்ந்த அப்பாஸ் வகாபுதின் என்பவரின் உடமைகளில் பழைய செய்தித்தாள்களில் சுற்றிய பொட்டலம் ஒன்று இருந்தது.
சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறையினர் அதனை பரிசோதித்ததில் இந்திய மதிப்பில் ரூ. 10.75 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல, சென்னையைச் சேர்ந்த, அப்துல்ஹக் என்பவரிடமிருந்து ரூ.18.30 லட்சம் வெளிநாட்டு கரன்சியும், திருச்சியைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவரின் டிராலி பேக்கில் (சக்கரத்துடன் கூடிய பெட்டி) மறைத்து வைத்திருந்த ரூ. 7.50 லட்சம் வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், அமெரிக்க-டாலர், ஆஸ்திரேலிய-டாலர், இங்கிலாந்து-பவுண்டு, சௌதி ரியால், அரபு நாடுகள்-திர்ஹாம், ஓமன்-ரியால்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் இருந்தன. இவற்றை முறையான அனுமதி பெறாமல் கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இது குறித்து சுங்கத் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.