போலியான பெயரில் விமானம் மூலம் திருச்சி வந்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஏர் ஏசியா விமானம் ஒன்று, கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஒருவர் போலியான பெயரில் விமானத்தில் வந்தது தெரியவந்தது.
அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குரண்டிகல்லார் பகுதியைச் சேர்ந்த அய்யர் நாடார் மகன் போஸ் (64).
கடந்த 12 ஆண்டுகளாக மலேசியாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றியுள்ள இவரது பாஸ்போர்ட் கடந்த சில வாரங்களுக்கு முன் காணவில்லையாம்.
இதனால் போஸ், மலேசியாவில் உள்ள முகவர் மூலம் திருச்சி குஜிலித் தெரு முருகையா தேவர் மகன் முத்துமாணிக்கம் என்ற போலியான பெயரில் அவசர சான்றிதழ் பெற்றுள்ளார்.
இச்சான்றிதழ் மூலம் கோலாலம்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் இவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, போஸை கைது செய்தனர்.