தமிழகத்தில் பொது பள்ளிக் கல்விமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கல்வி உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை பகுதியிலுள்ள தமிழ்நாடு சமூகப்பணி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ்நாடு கல்வி உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் க.மூர்த்தி தலைமை வகித்தார். தமிழக சமூகப்பணி மையத்தின் இயக்குநர் ஆல்பர்ட் தம்பித்துரை தொடக்கவுரையாற்றினார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை இலவசமாக நலிவுற்றப் பிரிவு குழந்தைகளுக்கு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பொதுப் பள்ளிக் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழ்வழியில் கல்வி வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தனியார் மயமாகும் கல்விச்சூழல்- குழந்தைத் தொழிலாளர் உழைப்பும் கல்வியில் என்றஅமர்வில் சிஏசிஎல்தேசிய அமைப்பாளர் பி.ஜோசப் விக்டர்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் சந்திரசேகர், கல்வி உரிமைக் கூட்டமைப்பின் கிழக்கு மண்டல அமைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
நீட்தேர்வு- பள்ளிக் கல்வி குறித்த அறிவிப்புகள், பொதுப் பள்ளிக்கல்வியை மேம்படுத்துமா என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் தமிழகன், ரோஸ் அறக்கட்டளை இயக்குநர் ஜயச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக, தீபச்சுடர் இயக்குநர் டிஎஸ்.விசாலாட்சி வரவேற்றார். ஜான் கே.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.