திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் காயமடைந்தார்.
புதுக்கோட்டை மச்சுவாடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (63). அவரது மனைவி கற்பகம் (57). இருவரும் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பல்லவன் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை புறப்பட்டனர். ரயில் அதிகாலை 6.30 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தது. ரயில் புறப்படும் நிலையில் தனது மனைவிக்கு டீ வாங்குவதற்காக கிருஷ்ணன் ரயிலை விட்டு கீழே இறங்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரயில் நகரத்தொடங்கியது. இதனால் நிலைதடுமாறிய அவர் நடைமேடையில் தவறி விழுந்தார். இதனையடுத்து சக பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.