திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் போலி லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்த 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
தொட்டியம் சந்தைபேட்டை அருகேயுள்ள காமன்கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அச்சடித்து சிலர் விற்பனை செய்வதாக தொட்டியம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில், அந்த வீட்டிலிருந்து வெளி மாநில பெயர் கொண்ட 260 போலி லாட்டரி சீட்டுகள், அதை தயாரிக்கப் பயன்படுத்திய பேப்பர் கட்டுகள், லேப்டாப், கலர் பிரிண்டர் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இதில் ஈடுபட்ட நாமக்கல் பகுதியைச் சேர்ந்த நல்லையன் மகன் சந்திரக்குமார் (40), பரமத்தி வேலூரைச் சேர்ந்த ராஜா மகன் சிலம்பரசன் (29), சக்திவேல் மகன் கோபால் (32), பழனிச்சாமி மகன் சேகர் (34), போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வாங்க வந்த தொட்டியம் அருகேயுள்ள சித்தூரைச் சேர்ந்த ரெத்தினாச்சலம் மகன் ராஜசேகர் (47), தொட்டியத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜேந்திரன் (55), வரதராஜபுரத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் ராஜா (48) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள தொட்டியத்தைச் சேர்ந்த சூரியபாலு, பரமத்தி வேலூரைச் சேர்ந்த குமார் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.