மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வை திருச்சி மாவட்டத்தில் 2,460 பேர் எழுதினர்.
யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 980 குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு பணிகளுக்கென 16 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். யுபிஎஸ்சி தேர்வுக்கு திருச்சி மாவட்டத்தில் 5,632 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,460 பேர் தேர்வு எழுதினர். 3,172 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.