காவல் நண்பர் குழுவைச் சேர்ந்தவர் லத்தியால் தாக்கியதில் இளைஞர் காயமடைந்ததை அடுத்து, அங்கிருந்த எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மேலப்புதூர் அருகே சனிக்கிழமை நள்ளிரவு எஸ்.எஸ்.ஐ. சீனிவாசன், காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஷெரில் உள்ளிட்டோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தென்னூர் அண்ணா நகரைச் சேர்ந்த காதர்மொய்தீன் (27), தனது நண்பர் சித்திக்குடன் (25) இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியே வந்தார். அவர்களை போலீஸார் சோதனை செய்வதற்காக தடுத்தபோது நிற்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஷெரில், வாகன ஓட்டிகள் மீது லத்தியால் தாக்கியதில் காதர்மொய்தீன் தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், காதர்மொய்தீனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்டோன்மென்ட் உதவி ஆணையர் சீனிவாசப் பெருமாள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ சீனிவாசனை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருண் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.