துறையூர் 7ஆவது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர் 7ஆவது வார்டில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதனை நகராட்சி கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நகராட்சி (பொறுப்பு) ஆணையர் அ. நாகேந்திரன், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராம மக்கள் மனு: துறையூர் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குள்பட்ட காளிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டதால் அங்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யமுடியாத நிலை உள்ளது. இதையடுத்து கிராமமக்களில் சிலர் துறையூர் வட்டார் வளர்ச்சி அலுவலர் பி. ராஜேந்திரனிடம் புதிதாக ஆழ்குழாய் கிணறு அதிக ஆழத்தில் அமைத்து தருமாறும், தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் காளிப்பட்டி கிராமத்தில் ஜியாலஜிஸ்ட்(நில அமைப்பியல் நிபுனர்) உதவியுடன் நீர் இருக்குமிடத்தையும், அங்குள்ள நீரின் அளவையும் தெரிந்து இடம் தேர்வு செய்து கொடுத்தால் உரிய நிதி ஒதுக்கி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும் என்று கூறினார்.