கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என தாயகம் திரும்பியோர் ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நதிகள் அறக்கட்டளை, நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில், தாயகம் திரும்பியோர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நதிகள் அறக்கட்டளை ஆலோசகர்பி.வி. துரைசாமி தலைமை வகித்தார். நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் தமிழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தாயகம் திரும்பியோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அவர்களுக்கான தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
தாயகம் திரும்பியோரின் வாரிசுகளுக்கு, தாயகம் திரும்பியோர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும், தாயகம் திரும்பியோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாயகம் திரும்பியோரின் நலனுக்காக தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியில், தாயகம் திரும்பியோருக்கான சேவைகளை அதிகரிக்க வேண்டும். கல்விக் கடனுதவி, உதவிதொகைகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சமத்துவம் கூட்டமைப்பு தலைவர் பொன். குணசீலன், தாயகம் திரும்பியோர் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. செவ்வந்தி, நெடுஞ்செழியன், ஸ்ரீபூரணன், டார்வின், கலைச்செல்வன், தமிழ்க்கவி, விஜயகுமார், செல்லத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தாயகம் திரும்பியோர் ஒருங்கிணைப்புக்குழு மத்திய மண்டலத் தலைவராக எஸ்.பி. செவ்வந்தி தேர்வு செய்யப்பட்டார்.