மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி திருச்சியில் வியாழக்கிழமை காலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி பீமநகர், கூனிபஜார் அருகே உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்த திருச்சி மேற்கு வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ், கூடுதல் காவல் ஆணையர் சிங்காரவேலன், உதவி காவல் ஆணையர் சீனிவாசபெருமாள், ஆய்வாளர்கள் பெரியசாமி, சீத்தாராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்படவில்லை. கடையை அகற்ற வலியுறுத்தி கடையின் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் வட்டாட்சியர் பாத்திமா சாகாயராஜ், மாவட்ட ஆட்சியரிடம் பேசி கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் போராட்டத்தை கைவிடுமாறும் கூறினார். அதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.