லால்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து விவசாயியை தாக்கிய வழக்கில் அரசு ஊழியர் உள்பட 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
லால்குடி அருகேயுள்ள நகர் ஊராட்சி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியேல் (56). இவர் திருச்சி மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் வினோத் (35). இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவர் கருப்பண்ணன் மகன் தர்மர் (55). இவர்களுக்கு இடையே வீட்டின் வாசல் முன்பு தண்ணீர் ஊற்றியது தொடர்பாக கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதில் காயமடைந்த தர்மர் லால்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மருத்துவமனையில் இருந்த தர்மரை அதே பகுதியைச் சேர்ந்த மருதை என்பவர் அரிவாளால் தாக்கி விட்டு தப்பியோடினார்.
இந்த வழக்கு தொடர்பாக லால்குடி போலீஸார் இசக்கியேல் அவரது மனைவி லீமாரோஸ், மகன் வினோத், வினோத் மனைவி ஆரோக்கியசெல்வி, மருதை ஆகிய 5 பேரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.