திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 421 காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர்.
வையம்பட்டி ஒன்றியம், பெரிய அணைக்கரைபட்டியில் ஆண்டுதோறும் புனித செபஸ்தியார், புனித அந்தோனியார் ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டை காண சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.
தேவாலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன் தொடங்கி வைத்தார்.
முதலில் கோயில் காளைகளும், பின்னர் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 421 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு 252 வீரர்கள் களமிறங்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்
வெள்ளி காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகள் முட்டியதில் 10 வீரர்களுக்கு லேசான காயமும், 1 வீரருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மணப்பாறை எம்எல்ஏ ஆர். சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.