திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சென்னகரை அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் கோடைகால விளையாட்டுப் பயிற்சிக்காக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்துக்குச் சென்றனர். அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி முடிந்த பிறகு வெள்ளிக்கிழமை திருச்சியில் உணவுக்கூடத்தில் சாப்பிட்டுள்ளனர்.
மாலையில் ஊருக்குத் திரும்பியவுடன், அவர்களில் சுபாஷ்சந்திரபோஸ் (14), மனோஜ்குமார் (15), ஆர்த்தி (14), விக்னேஷ் (11) உள்ளிட்ட 18 பேருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு, இவர்களில் 6 மாணவர்கள் உடல்நலம் தேறி வீட்டுக்குத் திரும்பினர். 12 பேர் தீவிரச் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.