திருச்சி லாசன்ஸ் சாலை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர்.சிலை அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மோகோல் கழிவுகள் உள்ளிட்டவை அதிகளவில கொட்டப்பட்டிருந்தன. இதை வியாழக்கிழமை காலை கண்ட சிலர், திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர்
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில், நீதிமன்றம் எதிரில் லாசன்ஸ் சாலை பகுதியில் உள்ள பன்மாடி கட்டடத்தில் புதிய கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், இதற்காக அந்த நிறுவனத்தின் உள் அலங்கார வேலைகள்
மேற்கொள்ளப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை
வாய்க்காலில் கொட்டப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.3000 அபராதம் விதித்து, அத்தொகையை உடனடியாக செலுத்தவும் உத்தரவிட்டனர்.