துறையூர் அருகே கோயிலில் அன்னதான திட்டத்துக்கு பழுதான எரிவாயு அடுப்பை கோயில் நிர்வாகம் மாற்றித் தராததால் விறகு அடுப்பில் பணியாளர்கள் உணவு தயாரிக்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வகையாறா நிர்வாகம் சார்பில் பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் தினமும் தமிழக அரசின் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் 50 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கிய போது விறகு அடுப்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. எரிவாயு அடுப்பை பயன்படுத்த அரசு உத்திரவிட்டதைத் தொடர்ந்து இரும்பாலான எரிவாயு அடுப்பும், ஒரு மாதத்துக்கு 3 எரிவாயு சிலிண்டரும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு இரும்பு எரிவாயு அடுப்பு துருப்பிடித்து போனது.
இதுகுறித்து, கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தும் அடுப்பை மாற்றித் தரவில்லையாம். அந்த அடுப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் விபத்து ஏற்படலாம் என்ற அஞ்சிய பணியாளர்கள், மீண்டும் விறகு அடுப்பில் உணவு தயாரிக்கின்றனர். இப்படி தயாரிக்கப்படும் உணவில் புகை நாற்றம் அடிப்பதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் பணியாளர்களும் புகை எரிச்சலில் தினமும் அவதியுறுகின்றனர்.
ஆகவே, கோயில் நிர்வாகம் எரிவாயு அடுப்பை மாற்றித் தரவேண்டும் என பணியாளர்களும் , பயனாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.