துறையூர் உர விற்பனை மற்றும் தயாரிப்பு மையங்களில் வட்டார வேளாண் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
துறையூர் வேளாண் அலுவலக உதவி இயக்குநர் கோவிந்தராசு தலைமையில் வேளாண் அலுவலர்கள் ரெங்கராஜன், நந்தகுமார், ரமேஷ், முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் துறையூர் புறவழிச்சாலையில் உள்ள கலப்பு உரத் தயாரிப்பு மையம், மதுராபுரியில் உள்ள உர உற்பத்தி மையம், துறையூர், சிங்களாந்தபுரம், சேனப்பநல்லூர், கண்ணனூர் ஆகிய இடங்களில் உள்ள உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
பருவமழை விவசாய சாகுபடிக்கு சாதகமாக உள்ளதால் நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் போதியளவில் இருப்பு உள்ளதையும், அரசு வழங்கும் மானியம் விவசாயிகளுக்கு முறைப்படி கிடைப்பதை உறுதி செய்யவுமே இந்த ஆய்வு நடந்ததாகவும், விதிகளைப் பின்பற்றாத உர விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்தார்.