திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாரும், சிறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறையில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைதிகளை வழக்கு தொடர்பாக அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது வழக்கம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) திருச்சி சிறையிலிருந்த நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த அப்பு (எ) செல்வம் (25), சத்யராஜ் (30), நாகப்பட்டினம் மேல்கரையைச் சேர்ந்த ஐயப்பன் (33) ஆகிய 3 கைதிகளையும் வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, திரும்ப அழைத்து வந்தனர்.
சிறை வாயிலில் சிறைக் காவலர்கள் கைதிகள் மூவரிடமும் சோதனை செய்து, சிறைக்குள் அடைத்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில், சிறைக்காவலர்கள் கைதிகளின் அறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறை வார்டன் (பொறுப்பு) ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.