திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கட்டடத் தொழிலாளியின் இரு வீடுகளின் பூட்டைஉடைத்து 25 பவுன் நகைகள், ரூ.20,000 ரொக்கம் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மணப்பாறை ஒன்றியம், வேங்கைகுறிச்சி அருகிலுள்ள மேலமஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆ. ஜான் பீட்டர் (49). கட்டடத் தொழிலாளியான இவர் திங்கள்கிழமை வழக்கம் போல திருச்சியில் வேலைக்காக வந்துவிட்டார். ஜான் பீட்டர் மனைவி மேரி (47), உடல்நலக் குறைவால் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரைப் பார்ப்பதற்காக, மகன் அருண் வினோத்துடன்(24) சென்றுவிட்டார்.
கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்று விட்டு, மதியம் வீட்டுக்கு வந்த ஜான் பீட்டரின் மகள் ஜோஸ்பின் சாந்தி, தனது பெற்றோரின் 2 வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
ஜான் பீட்டர் உள்பட 3 பேரும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோவிலிருந்த 25 பவுன் நகைகள், ரூ.20,000 ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மணப்பாறை டி.எஸ்.பி. ஆசைத்தம்பி, காவல் ஆய்வாளர் கென்னடி, உதவி ஆய்வாளர் ரூபினி உள்ளிட்டோர் திருட்டு நடைபெற்ற பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனர். வீட்டில் யாரும் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை மணப்பாறை போலீஸார் தேடி வருகின்றனர்.